விட்டிலாபுரத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்...


2025ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத வலிமையான தூத்துக்குடி மாவட்டதை உருவாக்கும் நோக்கத்தோடு துணை இயக்குநர், மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம் அறிவுறுத்தலின்போரில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் 14ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இதனடிப்படையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி மேற்பார்வையில், தேசிய காசநோயகற்றும் திட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் விட்டிலாபுரத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் வைத்து நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் பிலிப் பாஸ்கர் தலைமை வகித்தார். அதன்பின்னர் அவர் பேசுகையில், பொதுவாக ஒருவருக்கு தொடர் இருமல், மாலை நேரங்களில் காய்ச்சல், இரவில் வியர்த்தல், உடல் எடை குறைதல், உடல் சோர்வு, சளியில் ரத்தம் வருதல் ஆகியவை இருந்தால் அது காசநோய்க்கான அறிகுறி. இந்த அறிகுறி உள்ளவர்கள் காசநோய் இருக்கிறதா என்பதை சளியை எடுத்து பரிசோதிப்பதன் மூலம் உறுதிப்படுத்த முடியும் என்றார்.
இந்த முகாமில் காசநோய் குறித்த விழிப்புணர் துண்டு பிரசுரங்களை தொழிலாளர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த முகாமில் செவிலியர் சுப்புலெட்சுமி, குடிநீர் சுத்திகரிப்பு நிறுவன பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.