வசவப்பபுரம் முதியோர் இல்லத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்...




2025ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத வலிமையான தூத்துக்குடியை உருவாக்கும் நோக்கத்தோடு துணை இயக்குநர், காசநோய் மருத்துவ பணிகள் டாக்டர் சுந்தரலிங்கம் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் கடந்த 14ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி மேற்பார்வையில், தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் வசவப்பபுரம் முதியோர் இல்லத்தில் வைத்து நடந்தது.
இந்த முகாமிற்கு கருங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் பிலிப் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.
இயற்கை உணவு கண்காட்சியை வல்லநாடு சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார் துவக்கி வைத்தார். அதன்பின்னர் அவர் பேசுகையில்,
முதியோர்கள் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ குறைந்த அளவு உணவு உண்டாலும் சரியான நேரத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த முகாமில் சுகாதார குழுவினர் முதியோர்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள்.
இந்த முகாமில் ஆய்வக நுட்பநர் ஜெமிலா, முதியோர் இல்ல நிர்வாகி ரெச்சேல் ஜெரினா, சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் முதியோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.