கோடைகாலம் தொடங்குகிறது... மின்கட்டணத்தை குறைக்க... மின்சாரத்தை சேமிப்பது எப்படி? சில டிப்ஸ் இங்கே...

மின்சாரம் அன்றாடம் பயன்படுத்துவது... அதில் இயன்றவரை சிக்கனத்தை எப்படி கடைபிடிக்கலாம்.. கடைப்பிடித்து ஆகணும் வருங்கால சந்ததிக்கு நாம் செய்யக்கூடிய உதவி அதுதான்.
மின்சார சிக்கனம் வீட்டுக்கும் நாட்டுக்கும் அவசியம் . தமிழ்நாட்டில கடந்த சில வருடங்களாக நமது மின் தேவை அதிகமாகி விட்டது அதனால் அவதியுற்று வருகிறோம். வீட்டில் இரவில் மின்விசிறி சுழலவில்லை என்றாலோ AC நின்றுவிட்டாலோ நம் தூக்கமும் அதனுடன் போய்விடுகிறது. இன்னொரு பக்கம் மின்கட்டணமும் எகிறியுள்ளது. எனவே மின்சாரத்தை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தும் சில முறைகள் இங்கே....
இது பலருக்கு தெரியும் என்றாலும் இதனை பின்பற்றினால் மிகவும் நல்லது அப்படின்னு எனக்கு தெரிந்த மின்பொறியாளர்கள் சொன்னது.
மின் சாதனங்களின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது மின்சாரத்தினை சிக்கனப்படுத்த ஒரு வழியென்றால் மின் சாதனங்களை அமைக்கும் போதே முறையாக அமைத்துக் கொள்ளுவது இன்னொரு பிரதான வழி ஆகும். அதற்கு ஏற்ப வயரிங் வேலைகளின் போதே சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமாம். எல்லா மின் சாதனங்களுக்கும் ஒரு வரையறை உள்ளது. இந்த அளவு மின்சாரத்தில் தான் இயங்கும் என்ற நியதி இருக்கிறது. அதற்கு தகுந்தவாறு அமைத்திட வேண்டுமாம்.
கணினி

பெரும்பாலும் கணினியை பயன்படுத்திய பிறகு CPU வை மட்டும் அனைத்து விட்டு மானிட்டரை அணைக்காமல் விடுவது பலரது வழக்கம். வேறு வேலை பார்த்து கொண்டிருந்தாலும் அருகில் இருக்கும் கணினியை அணைக்க மனசு வராது. இதனை தவிர்க்கவேண்டும். மேலும் Tube Monitor ரை விட LCD monitor நான்கில் ஒரு பங்கு தான் மின்சாரத்தை பயன் படுத்தும் என்பதால் LCDக்கு மாறிவிடுவது நல்லததாம்.
மின்விளக்குகள்

வீட்டில் பகல் நேரத்தில் தேவை இல்லாமல் மின்விளக்கை போட வேண்டாம். இருட்டாக இருந்தால் ஜன்னலை திறந்து வைக்கவும். மாலை நேரத்திலும் ஆள் இல்லாத அறைகளில் விளக்கு எரியவேண்டாம். பூஜை அறையில் கூட zero watts பல்பு போதுமாம்.
சாதாரண குண்டு பல்புகளுக்குப் பதில், வெண்ணிறத்தில் சுருள் சுருளாக உள்ள "சி.எப்.எல்." விளக்குகளைப் பயன்படுத்தலாம். இவை சற்று விலை அதிகம் என்றாலும் மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்தும். குண்டுபல்புகளில் 8 முதல் 10 சதவீத மின்சாரம்தான் வெளிச்சமாக மாற்றப்படுகிறது. பாக்கி 90 சதவீத மின்சக்தி வெறும் வெப்பமாகத்தான் வீணாகிறது.
விளக்கு வெளிச்சத்தைக் கூட்ட, குறைக்க உதவும் "டிம்மர்கள்" இருந்தால், தேவையான அளவுக்கு மட்டும் வெளிச்சத்தை வைத்து மின்சார செலவைக் கட்டுப்படுத்தலாம்.
டியூப் லைட்களில் "எலக்ட்ரானிக் சோக்"குகளை பயன்படுத்தினால் மின்சக்தி பயன்பாட்டைக் குறைப்பதோடு, நல்ல வெளிச்சத்தையும் பெறலாம்.
Air Conditioner

அதிக குளிர் ஊட்டும் நிலையிலோ அல்லது மிக குறைந்த குளிர் ஊட்டும் நிலையிலோ AC யை பயன்படுத்தவேண்டாம். மின் சிக்கனம் தரும் ஐந்து நட்சத்திரம் கொண்ட AC யை அதன் தயாரிப்பாளர்கள் தரும் சிக்கன பரிந்துரையை பின்பற்றி இயக்கலாம். அரை குளிர்ந்தவுடன் இனி AC தேவை படாது என்ற நிலையில் AC யை அனைத்தும் விடலாம். உங்கள் அறைக்கு தகுந்தவாறு சரியான AC (1.0.௦ டன், 1.5 டன் ) யை நிறுவவேண்டும். அறை AC பயன்பாட்டிற்கு ஏற்றவாறு முழுமையாக மூடப்பட்டு இருக்க வேண்டும் . AC யை மறைக்குமாறு எந்த பொருளையும் வைக்க வேண்டாம்.
சிலர் சிலவேளைகளில் ஒரே நேரத்தில் ஏ.சி.யையும் மின்விசிறியையும் பயன்படுத்துவார்கள். இதனால் ஏ.சி.யால் போதுமான அளவுக்குக் குளிர்விக்க முடியாது. மின்சாரம்தான் வீணாகும்.
கதவுகள், ஜன்னல்களில் இடைவெளி இருந்தால் வெளி வெப்பக்காற்று உள்ளே வந்து, ஏ.சி. கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கும். மின்சக்தியும் கூடுதலாகச் செலவாகும்.
ஏ.சி. அறையில் ஃப்ரிஜ் அல்லது அதிக வாட் விளக்குகள் இருப்பது மேலே குறிப்பிட்ட பாதிப்பையே ஏற்படுத்தும். ஏ.சி. வெப்பநிலை அளவு, வசதியான 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு "செட்" செய்யப்பட வேண்டும்.
ஏ.சி.யில் உள்ள "ஏர் பில்டரை" அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். ஏ.சி.யைப் பயன்படுத்தாதபோது ஜன்னல்களைத் திறந்துவிட்டு வெளிக்காற்று உள்ளே வர அனுமதிக்க வேண்டும்.
துணி துவைக்கும் இயந்திரம்
அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்கவும். கூடுமானவரை முழு load உடன் இயக்கவும். Hot Mode இல் இயக்கினால் அதிக அளவு மின்சாரம் செலவாகும்.
ஓர் இரண்டு துணிகள் இருந்தால் கைகளால் துவைத்து விடவும். துணியில் உள்ள அழுக்குக்கு தகுந்தவாறு துவைக்கும் நேரத்தை குறைத்து வைத்து கொள்ளவும். நல்ல இயந்திரமாக பார்த்து வாங்கவும்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி பெட்டிக்கு செல்லும் மின் இணைப்பை பயன்படுத்தாத பொழுது எடுத்து விடவும். இது மிக கஷ்டமான காரியமாக தோன்றும். பழக்கபட்டால் சரியாகிவிடும். இரவில் Cable Wire-ரையும் ஒரு பாதுகாப்பிற்காக எடுத்துவிடுங்கள்
வாட்டர் ஹீட்டர்

தேவையான அளவு மட்டும் தண்ணீரை சூடாக்கி கொள்ளவும். அதிகமாக கொதிக்கும் நிலைக்கு சூடாக்க வேண்டாம். அடுத்தவர் குளிக்க செல்லும் வரை ஹீட்டரை ON செய்து வைக்க வேண்டாம். Theromostat உள்ள ஹீட்டராக வாங்கவும்
ஹீட்டர் டேங்க் நன்றாக "இன்சுலேஷன்" செய்யப்பட்டிருக்க வேண்டும். வெந்நீர் உள்ள நிலையில் டேங்கின் வெளி வெப்ப நிலையைப் பாருங்கள். அது சாதாரண அறை வெப்பநிலையில் இருந்தால் டேங்க் நன்றாக இன்சுலேஷன் செய்யப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அந்தந்தப் பருவத்துக்கு ஏற்றவாறு "தெர்மோஸ்டாட்"டை "செட்" செய்யுங்கள். 60 டிகிரி செல்சியஸ் என்பது பெரும்பாலானோருக்கு ஏற்றது.
கீசரை தேர்வு செய்வதில் புத்திசாலித்தனமாக இருப்பது நல்லது. உடனடியாகச் சூடாகும் கீசர்கள் மிகவும் வசதியானவைதான். ஆனால் ஏராளமான மின்சக்தியை எடுத்துக்கொள்ளும். நவீன கியாஸ் கீசர்களை தேர்வு செய்துகொள்ளலாம். சூரிய சக்தி வாட்டர் ஹீட்டர்கள் சுற்றுச்சூழலுக்கு இயைந்தவையாக வெந்நீரை அளிக்கும். ஒரு கீசரை "ஆன்" செய்வது, 75 டியூப் லைட்களை எரிய விடுவதற்குச் சமம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
குளிர்சாதன பெட்டி

சூடான பால், சூடான சமைத்த பொருட்களை சற்று ஆரிய பிறகே Fridge இல் வைக்க வேண்டும்.
பெரும்பாலான ஃப்ரிஜ்களில் குளிர், அதிக குளிர், மிக அதிகமான குளிர் என்ற வகையில் "செட்டிங்" இருக்கும். ஆனால் ஃப்ரிஜுக்கு பிரீஸரிலும், மற்ற பிரிவுகளில் இயல்பான வெப்பநிலை எவ்வளவு என்று குறிப்பிடப்பட்டிருக்காது. ஃப்ரிஜ்ஜினுள் அதிகமான குளிரோ, குறைவான குளிரோ உள்ளே வைக்கப்படும் உணவுப்பொருட்களின் தரத்தைப் பாதிக்கும். ஒவ்வொரு கூடுதல் குளிர்ச்சிக்கும் 5 சதவீதம் கூடுதல் மின்சாரம் செலவாகும். பிரீசர் அல்லாத பகுதிகளில் 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை போதுமானது. ஃப்ரிஜ்ஜின் மின்சாரத்தைப் பயன்படுத்தும் திறனை அறிய இந்த வெப்பநிலை அளவை நாம் அளவிட வேண்டும்.
பயன்படுத்தப் பயன்படுத்த ஃப்ரிஜ் கதவின் "காஸ்கெட்" தளர்வாகி, காற்றுக் கசிவுக்கு வழிவகுக்கலாம். கதவைச் சாத்தி இடையில் ஒரு காகிதத்தைச் செலுத்திப் பாருங்கள். காகிதத்தை எளிதாக நுழைத்து எடுக்க முடிந்தால் "காஸ்கெட்"டை மாற்ற வேண்டும் என்று அர்த்தம்.
"பிராஸ்ட் பிரீ" இல்லாத ஃப்ரிஜ்களின் பின்புறத்தில் கம்பித்தடுப்பு இருக்கும். இதில் தூசி படியும். சிலந்தியும் வலை பின்னலாம். இது பிரிஜ்ஜின் மின்சக்தி பயன்படுத்தும் திறனைப் பாதிக்கும். சுவரிலிருந்து போதுமான இடைவெளி விட்டு ஃப்ரிஜை வைப்பதும் முக்கியம்.
நீர் மோட்டார்

தண்ணீர் தொட்டி மேல் நிலையில் இருந்தால் தண்ணீரை மிக சிக்கனமாக பயன்படுத்தவும். அதன்மூலம் நீர் விரயத்தை தடுபதுடன் அடிக்கடி மோட்டார் பயன்படுத்துவதையும் தடுக்கலாம்
வயர்கள்

பழைய அல்லது ஒழுங்கற்ற "வயரிங்" காரணமாக மின்கசிவு ஏற்படக்கூடும். இதுவும் மின்சார பில் அளவைக் கூட்டும். வீட்டில் மின்கசிவு இருக்கிறதா என்று அறிய அனைத்து மின்சாதனங்களையும் விளக்குகளையும் அணைத்துவிட்டு மெயின் சுவிட்ச் மீட்டர் ஓடுகிறதா என்று பாருங்கள். அது ஓடினால் மின்கசிவு இருக்கிறது, கவனிக்க வேண்டும் என்று அர்த்தம்.
மின் இணைப்புகளை அமைத்திடும்போதே அதற்கே உரித்தான வரைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு செய்திடும் பட்சத்தில் மின்சாரம் வீணாவது தடுக்கப்படும். அதிக அளவிலான மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கும் சாதனங்களுக்கு ‘ப்யூஸ்’ இணைப்பு ஏற்படுத்திட வேண்டும். மின் சாதனத்தில் ‘ப்யூஸ்’ இணைப்பிற்கென்றே ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கும். அதே போல வெளியிலிருந்து வீட்டிற்கு மின் இணைப்பு பொருத்தப்படும் இடத்தில் ப்யூஸ்’ இணைப்பு கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும்.
அதற்காக குறிப்பிட்ட பகுதியிலிருந்து நேரடியாக பூமிக்குள் செல்லும் படி மின் வயரினால் ஏற்படுத்த வேண்டும். ‘ப்யூஸ்’ இணைப்பிற்கென்றே குறிப்பிட்ட வயர்கள் கடைகளில் கிடைக்கும். எத்தனை சுவிட்ச் பெட்டிகள் ஏற்படுத்துகிறோமோ, அத்தனையிலும் ப்யூஸ் இணைப்பினையும் அமைத்திட வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் மின் கசிவினால் விபத்து ஏற்படும் பட்சத்தில் பெரும் ஆபத்துக்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கலாம்.
மின் கடத்தும் திறன் :
அதே வேளையில் தரமான வயர்களை பயன்படுத்த வேண்டும். வயர்களின் மின் கடத்தும் திறனை அறிந்து அதனை பயன்படுத்தினால் நல்லது. ஏனெனில் சாதனத்தைப் பொறுத்து மின் தேவை மாறுபடும். மின் வயர்களில் நிறைய வகைகள் உள்ளன. குறைவான அளவு மின்சாரத்தை கடத்தும் வயரில் இருந்து பல மடங்கிலான மின்சாரத்தை கடத்திடும் வகையிலும் உள்ளன.
அதன் அடிப்படையில் உயர் அழுத்த மின்சாரத்தை கொண்டு இயங்கு சாதனங்களுக்கு அதற்கேற்ப மின்சாரத்தை தடையில்லாமல் கொண்டு சேர்த்திடும்படி செய்வது நம் கடமை. அதை விடுத்து குறைந்த அளவு அடர்த்தி கொண்ட வயரினை பயன்படுத்தியிருக்கிறோம் என்றால், வயரில் வெப்பம் உருவாகி தீப்பற்றும் நிலை ஏற்படும்.
இது தவிர சாதனத்தின் மின் தேவை அதிகமாக இருக்கும் போது, குறைவான மின்சாரமே உட்செல்கிறது என்றால் சாதனத்தின் இயங்கு திறன் வீணாக குறைந்து தக்க ஆயுள் இல்லாமல் போகும். மின் இணைப்புகளை ஏற்படுத்திடும் போது அனாவசியமாக ஆங்காங்கே ஒட்டுகள் போடக்கூடாது. மிகையான மின்பயன்பாடு கொண்ட சாதனங்களுக்கு செல்லும் வயர்களில் தேவையற்ற ஒட்டுகள் அறவே தவர்க்கப்பட வேண்டியது அவசியம். தேவையான இடத்தை அறிந்து பவர் பிளக்குளை அமைத்துக் கொள்வது நல்லது.
பழைய உபகரணங்கள்

பலருக்குப் பழைய வீட்டு உபயோக உபகரணங்களை மாற்ற மனம் வராது. ஆனால் சந்தைக்குப் புதிதாக வந்திருக்கும் உபகரணங்கள் நவீனத் தொழில்நுட்பம் கொண்டவையாக, சுற்றுச்சூழலுக்கு இயைந்தவையாக, குறைவாக மின்சக்தியைப் பயன்படுத்தக்கூடியவையாக இருக்கும். இன்றைய "லேட்டஸ்ட்" ஃப்ரிஜ், 1980-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஃப்ரிஜ்ஜை விட குறைவாகவே மின்சாரத்தை உபயோகிக்கும். எனவே பழையதை ஒதுக்கிவிட்டு புதிதாக வாங்குவதே புத்திசாலித்தனம்.
மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது என்பது இந்த காலத்தில் தேவையான ஒன்று. அதிக கட்டணம் என்பதைத் தாண்டி, மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நிலக்கரி அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.