அனவரதநல்லூர் சிறுவர் இல்லத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்...




2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத வலிமையான தூத்துக்குடியை உருவாக்கும் நோக்கத்தோடு துணை இயக்குநர், காசநோய் மருத்துவ பணிகள் டாக்டர் சுந்தரலிங்கம் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் கடந்த 14ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி மேற்பார்வையில், தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் அனவரதநல்லூரில் உள்ள மாற்றுத்திறாளிகள் சிறுவர் இல்லத்தில் நடந்தது. இந்த முகாமிற்கு நடமாடும் மருத்துவமனை மருத்துவ அலுவலர் பிலிப் பாஸ்கர் தலைமை வகித்தார். வல்லநாடு மருத்துவ அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இயற்கை உணவு கண்காட்சியை வல்லநாடு சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார் துவக்கி வைத்தார். அதன் பின்னர் அவர் பேசுகையில், எச்.ஐ.வி பாதிப்பு உள்ளோர், சர்க்கரை நோயாளிகள், இட நெருக்கடியில் வசிப்பவர்கள், குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு காசநோய் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது என கூறினார். நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதை சிறுவர்கள் நீங்கள் உணர்ந்து கொண்டு கீரைகள், கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சத்தான உணவுகளை உண்டு ஆரோக்கிமாக வாழ்வோம் என்பதை உறுதிமொழியாக ஏற்று நலமுடன் வாழ வேண்டும் என்றார்.
இந்த முகாமில் செவிலியர் சுப்புலெட்சுமி, சிறுவர் இல்ல காப்பாளர்கள் ஸ்டீபன், தினகரன், காப்ரியல் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.