top of page

 கொளுத்தும் வெயிலில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்து சில விஷயங்கள்...

கோடை கால தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் உக்கிரமாக தான் இருக்கிறது. இந்நிலையில் கொளுத்தும் வெயிலில் இருந்து மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்து சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். மதிய வேளையில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக முற்பகல் 11-மணி முதல் பிற்பகல் 3-மணிவரை வெயிலின் உக்கிரம் மிகவும் அதிகமாக இருக்கும். எனவே அந்த வேளைகளில் வெளியே செல்வதை தவிர்க்க முயற்சிக்கலாம். மேலும், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புறஊதாக்கதிர்கள் மற்றும் வெயில் காரணமாக தோல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆகவே, வெப்பத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கீரின் பயன்படுத்தலாம். வெயில் நேரங்களில் வெளியில் செல்லும் போது நாம் எந்த விதமான உடை அணிந்திருக்கிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக கருப்பு கலர் உடைகளை அணிவதை தவிர்த்து விடலாம். ஏனெனில் இவை வெயிலை உள்ளிழுக்கும் தன்மையை கொண்டிருக்கும். பருத்தி உடைகள் அணிவது சிறந்ததாக இருக்கும். மேலும், அவை உடலோடு மிகவும் இருக்கமாக இல்லாதவாறு இருக்க வேண்டும். வெயிலில் செல்லும் போது உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்தானது குறைந்து கொண்டே இருக்கும். ஆகவே வீட்டில் இருந்த வெளியே எங்காவது செல்கின்றீர்கள் என்றால் கட்டாயமாக தண்ணீர் பாட்டில் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். முடிந்த அளவு தண்ணீர் அதிகமாக பருகுங்கள். நாள் ஒன்றுக்கு குறைந்தது 8-முதல் 10-கிளாஸ் தண்ணீரை பருக வேண்டும். இந்த வெப்பத்தில் உடலை பாதுகாக்க வேண்டுமானால் தாகம் எடுக்காவிட்டாலும் தண்ணீரை குடித்துதான்ஆக வேண்டும். புகைப்பிடித்தல், ஆல்கஹால் மற்றும் காபி அருந்துதல் ஆகியவற்றை தவிர்த்தல் அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். இவைகள் உடல் வறட்சியை ஏற்படுத்தக்கூடியது. குறைந்த அளவிலான உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். உணவில் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது அவசியம். வெள்ளரிக்காய், தர்பூசணி, முள்ளங்கி மற்றும் கீரை வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் அதிகமான நீர்ச்சத்து உள்ளது. குறிப்பாக காரசாரமான உணவு வகைகளை விட்டு விடலாம். அதிகமாக வெயில் உள்ள நேரங்களில் கடினமான வேலையை செய்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் சுகாதாரமாக எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்து அவர்களை நோய்கள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 6 மாதங்களுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு அடிக்கடி தாய்ப்பால் ஊட்ட வேண்டும். உடல்நலத்தில் குறைவு ஏதேனும் இருப்பின் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி நடப்பது அவசியம்.

7 views0 comments
bottom of page